செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

கள்ளத் தோணி - குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 

கள்ளத் தோணி - குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 

அருள்எழிலனின் ஆளுமையின் பிறிதொரு பரிமாணம் அவர் ஒரு குறும்பட இயக்குனர் என்பது. பத்திரிக்கையாளர்கள் படைப்பிலக்கியவாதிகளாக இருப்பது தமிழ்ச் சூழலில் அபூர்வம். அடிப்படையில் படைப்பிலக்கிவாதியான புதுமைப்பித்தன் அரசியல் பகடி எழுத்தில் வல்லவராகத் திகழந்தார். மார்க்சிய அரசியல் விமர்சகரான ஜனசக்தி பத்திரிக்கை எழுத்தாளர் அறந்தை நாராயணன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலின் முன்னோடியாகத் திகழ்ந்தார். நடிகை சாவித்திரியின் உச்சமும் வீழ்ச்சியும் குறித்து அவர் எழுதிய வாரந்தோம் வயசாகிறது, ஜக்கா எனும் இரு நாவல்களில் அவர் தமிழ் சினிமா நடிகைகளின் அவல வாழ்வைச் சித்தரித்தார்.  

இன்றைய தலைமுறையில் பத்திரிக்கையுலகிலிருந்தபடி படைப்பிலக்கியத்திலும் ஈடுபடும் முக்கியமான இருவர் தமிழ்மகன் மற்றும் அருள்எழிலன். தமிழ்மகனின் வெட்டுப்புலி குறிப்பிடத்தக்க நாவல். சிறுகதையாசிரியரான அருள் எழிலன் ஏற்கனவே ராஜாங்கத்தின் முடிவு என ஒரு குறும்படமும் இயக்கியிருக்கிறார். ஈழமக்களது பாடுகளில் உணர்வுபூர்வமான ஈடுபாடு கொண்ட அருள்எழிலன் எழுதி இயக்கியிருக்கும் அவரது இரண்டாவது குறும்படம் கள்ளத்தோணி. 

படத்தைக் கண்ணுறுவதற்கு முன்பாக கள்ளத் தோணி எனும் பெயரைச் செவிமடுத்தபோது எனக்கு அந்தச் சொல்லின் வரலாறு ஞாபகம் வந்துபோனது. தமிழகத்திலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட மக்கள் கள்ளத் தோணி என அழைக்கப்பட்டனர். இது மலையகத் தமிழர்கள் பற்றிய படமா எனில் இல்லை. இது வடக்குத் தமிழர் பற்றிய படம். காலமாற்றத்தில் இந்தச் சொல் அடைந்திருக்கும் அர்த்த மாற்றத்தையும் குறித்தது இந்தக் குறும்படம்.  

இந்தக் குறும்படத்தின் பிரதான பாத்திரங்கள் இருவர். ஓரு முதியவர். ஓரு சிறுமி. முதியவரின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் தமிழகத்தின் மிகச் சிறந்த கோட்டோவியக் கலைஞர்களில் ஒருவரான வீர.சந்தானம். வீர சந்தானத்தின் ஓவிய ஆளுமைiயை நாம் ஈழ மக்களின் மீதான இனப்படுகொலையைச் சித்தரித்த அவரது முகில்களின் மீது நெருப்பு ஓவியத் தொகுதியில் காணலாம். வீர. சந்தானம் தனது ஆளுமையின் பிறிதொரு பக்கத்தை பாலுமகேந்திரா இயக்கிய சந்தியா ராகம் திரைப்படத்தில் வெளிப்படுத்தினார்.  

வீடு படத்தில் தனது அமரத்துவ நடிப்பைக் காண்பித்த அமரர் சொக்கலிங்க பாகவதர், தமிழ் சினிமாவின் ஆபூர்வ ஆற்றலுள்ள நடிகையருள் ஒருவரான அர்ச்சனா போன்றவர்கள் நடித்த சந்தியா ராகம் படத்தில் அரச்சனாவின் கணவராக, சென்னை நகரத்தின் கீழ்மத்தியதரவர்க்கக் குடும்பத்தலைவனாக நடித்திருந்தார் வீர.சந்தாணம். நடிப்பை வாழ்வின் இயல்பாக வாழ்ந்துகாட்டும் மிகச் சில தமிழ் நடிகர்களில் ஒருவர் வீர. சந்தானம். கள்ளத்தோணி குறும்படத்தில் அவர் ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்துசேரும் அகதி மனிதனின் பாத்திரமேற்று நடித்திருக்கிறார். 

ஈழப்போராட்டத்தில் போரும் அற்ற, சமாதானமும் அற்ற, போர்நிறுத்த ஒப்பந்த காலங்கள் அடிக்கடி வந்துபோனது. நிரந்தரமில்லாத சமாதான காலம் என இதனைக் கூறலாம். அத்தகைய காலத்தில், தமிழகத்தில் நிலைகொண்டுவிட்ட ஒரு ஈழச் சிறுமியினதும், அவளுக்காகவே தனது உயிரைக் கையில் பிடித்தபடி நடைப்பிணமாக நகர்ந்து கொண்டிருக்கும் அவளது தாத்தாவினதும் வாழ்க்கைக் கதையே கள்ளத் தோணி படமாக உருவாகி இருக்கிறது.  

ஈழத்தில் போர் நிகழ்ந்த காலமொன்றில் சிறுமி பிறக்கிறாள். உக்கிரமான போரில் விடுதலைப் போராளியான சிறுமியின் தந்தை இறக்கிறார். பச்சிளம் குழந்தையைத் தாத்தாவின் கைகளில் ஒப்புவிக்கும் தாய் தானும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவெடுக்கிறாள். குழந்தையை எடுத்துக்கொண்டு தமிழகத்துக்குத் தப்பிச் செல்லுமாறு அவள் தனது தந்தையைக் கோருகிறாள். தாத்தாவும் பேத்தியும் இப்படித்தான் தமிழகம் வந்து சேர்கிறார்கள். 

போர்நிறுத்த ஒப்பந்தம் வருகிறது. குழந்தை இப்போது சிறுமியாக வளர்ந்து நிற்கிறாள். தனது தாயைப் பார்த்தேயிராத சிறுமிக்குத் தாயைக் காட்ட வேண்டும் என தாத்தா நினைக்கிறார். பேத்திக்கெனவே வாழும் அவரது எஞ்சிய வாழ்வின் இலட்சியமே அதுதான். அவரது மகள் உயிருடன் இருக்கிறாளா என்ற நிச்சயமெல்லாம் அவருக்கு இல்லை. அவளையும் அவர் இந்தச் சமாதான காலத்தில் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். இலங்கைக்குப் போக வேண்டும் என அவர் நினைக்கிறார். அகதியாக வந்த இவர் இப்போது முறைப்படியான முறையில் ஆவணங்களுடன் இலங்கை செல்ல நினைக்கிறார். அவரிடம் தம்மை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் என எதுவும் இல்லை.  

இந்தியாவிலிருந்து தான் இலங்கை செல்வதற்கான அனுமதிக்கு முயற்சிக்கும்போது உள்ளுர் காவல்துறை அலுவலகத்தில் அல்லது தாசில்தாரிடம் அடையாளப்பத்திரம் பெற்று வருமாறு அவர் கோரப்படுகிறார். காவல் துறையினரிடம் சென்றால் தாசில்தாரைக் கை காட்டுகிறார்கள். தாசில்தாரிடம் சென்றால் காவல்துறையைக் கை காட்டுகிறார்கள். அவர் கையறுநிலைக்குத் தள்ளப்படுகிறார். விளைவாகத் தெளிவான ஒரு முடிவும் எடுக்கிறார்.

அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இடத்தில் கயிறுதிரிக்கும் சக தொழில் செய்யும் பெண்மணிக்கும், சிறுமியின் விளையாட்டுத்; தோழனான சிறுவனுக்கும் இவர்கள் காணாமல் போனது மனதுக்குக் கஷ்டமாக ஆகிறது. கடற்கரை வழி நடந்து இருவரும் அவர்களைத் தேடி அகதிகள் குடியிருப்புக்குப் போகிறார்கள். தாத்தாவும் பேத்தியும் இந்திய அரசின் அனுமதியின்றி தோணியில் இலங்கைக்குப் புறப்பட்டுப் கோய்விட்டார்கள் என்கிறாள் அகதிக் குடியிருப்பிலுள்ள பெண்மணி.


பெரியவருக்கும் அவரது பேத்திக்கும் என்ன நேர்ந்தது என அறியமுடியாத சூழலில், தமது வீட்டுக்குத் திரும்புகிறார்கள் தாயும் அவளது மகனான சிறுவனும். அடுத்த காட்சியில் வழக்கு மன்றக் கூண்டில் நிற்கிறார்கள் தாத்தாவும் பேத்தியும். எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் கள்ளத் தோணியில் தப்ப முயன்றதற்காக கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் தாத்தாவும் பேத்தியும்.

பெரியவர் தனது சார்பில் சொல்ல ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்கிறார் நீதிபதி. தளர்ந்த, சோர்ந்துபோன, சொல்ல ஏதுமற்ற முதியவர் இல்லை எனத் தலையசைக்கிறார். அவரையும் அவரது பேத்திiயையும் பிரித்து நீதி வழங்கும் நீதிபதி, அவரைச் சிறைக்கும், சிறுமியைக் குழந்தைக் காப்பகத்துக்கும் கொண்டு செல்லுமாறு உத்தரவிடுகிறார். தனித்து நிற்கும் சிறுமியை ஒரு கணம் பார்க்கும் பெரியவர் சாட்சிக் கூண்டிலிருந்து இறங்குகிறார்.

வெளியே வரும் தாத்தாவும் பேத்தியும் தம்மைப் பார்க்க வந்திருக்கும் கயிறுதிரிக்கும் பெண்ணையும் அவளது மகனான சிறுவனையும் துயரத்துடன் பார்த்தபடி, அவர்களுக்கெனத் தயாராகவிருக்கும் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்படுவதுடன் படம் முடிகிறது.


தாயைப் பார்த்திராத, போரினிடையில் பிறந்த குழந்தை பற்றி ஏற்கனவே மணிரத்னத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வெளிவந்த வந்த தமிழகத்திலிருந்து அதே கதைப்பொருளுடன் வந்திருக்கும் படம்தான் கள்ளத்தோணி. இது அந்தப் பிரச்சினையின் அரசியலையும் பேசும் படம். ஈழ அகதி மனிதர்களை இந்திய அரசு நடத்தும் மனிதாபிமானமற்ற முறையினைக் குறித்த இப்படம் எழுப்புகிறது.

இப்படம் மனித வாழ்வின் மிக மிக ஆதாரமான, உணரச்சிவசமான ஒரு உறவு குறித்த திரைக்கதை. அந்த உறவின் உணர்ச்சிவசமான கதை சொல்லல் காட்சியமைப்புகளில் உருவாகியிருக்கவில்லை. பேத்திக்காகவே உயிர்வாழும் தாத்தா அவர். அவரது பேச்சும் மூச்சுமாக இருப்பவள் அவள்தான். அவளை என்றும் பிரிந்திருக்க நினைக்காதவர் அவர். அவளுக்காகவே, அவளது சந்தோஷத்துக்காகவே, அவளது தாயை அவளுக்குக் காட்டுவதற்காகவே அவர் அரசின் தடைகளைத் தாண்டுகிறார். ஆபத்தான கடற்பயணத்தையும் அவர் மேற்கொள்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி அவரையும் அவரது பேத்தியையும் பௌதீக ரீதியில் பிரிப்பது என்பதுதான் அவரது வாழ்வில் நடக்ககூடிய எரிமலை வெடிப்பை ஒத்த பேரழிவாக இருக்க முடியும். இந்தப் பிணைப்பின் உணர்ச்சிவசமான மனமொழியை, உடல் மொழியை இத்திரைப்படம் கொண்டு வந்திருக்கவில்லை. நீதிபதி இருவரையும் பிரித்துத் தீரப்பு வழங்கும்போது குழந்தையைத் தன்னுடன் இறுகக் கட்டிக் கொள்கிற தாத்தாவின் உடனடி இயல்புணர்ச்சியைக் கூட இக்காட்சி வெளிப்படுத்த வில்லை. சிறுமியை மௌனமாகப் பெரியவர் பார்ப்பதுடன் இக்காட்சி முடிகிறது.


புனைவுமொழியில் வெளிப்படும் படைப்புமொழி வரலாறு போன்றதொரு உரைநடைத்தன்மையைக் கொண்டிருப்பதில்லை. படைப்பில் எல்லாவற்றையும் பாத்திரத்தின் வாய்மொழியில் விளக்க வேணடியிருப்பதும் இல்லை. கதை சொல்லல் துவங்கம்போதே ஏற்னவே நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வுக்கு இடையில்தான் பார்வையாளன் நுழைகிறான். பாத்திரங்களின் நடத்தை, அவர்கள் வாழும் சூழல், அவர்களது இயல்பான, பிரசங்கம் போன்றதல்லாத, உரையாடலின் வழியிலேயே பார்வையாளன் பாத்திரங்களின் பங்காளியாக ஆகமுடியும். இதுவே காட்சி மொழியின் சிறப்பு.

கயிறுதிரித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடமும், அங்கு இருக்க நேரும் குழந்தைகளிடமும் யுத்தம் குறித்தும் ஈழஅழிவுகளின் வரலாறு குறித்தும் பெரியவர் உரையாற்றும் மிக நீண்டகாட்சி இயல்புத்தன்மையைக் கொண்டிராது, செய்தியைக் கடத்திவிட வேண்டும் எனும் இயக்குனரது முனைப்பை மட்டுமே கொண்டிருக்கிறது.

அகதிக் குடியிருப்புக் காட்சிகள், கடற்கரைக் காட்சிகள், காவல் நிலையம், நீதிமன்றக் காட்சிகள், பெரியவரின் குணச்சித்திரத்தைக் கட்டமைக்கும் தெருக்கூத்துக் காட்சிகள், மகாகவியின் கவிதையின் பாடலாக்கம் என படைப்பூக்கமும் காட்சியூடகப் பிரக்ஞையும் கொண்டிருக்கிற இப்படத்தில், படத்தின் ஆதாரமான உணரச்சியைக் கொணர்வதில், நான் முன்குறிப்பிட்ட பேத்தி பெரியவர் இடையிலான நீதிமன்றக் காட்சி பங்காற்றியிருக்கவில்லை.

தேர்ந்த படைப்பிலக்கியவாதியும் குறும்படக் கலைஞருமான அருள் எழிலன், எடிட்டர் சுரேஸ் அர்ஸ், ஒளிப்பதிவாளர் செழியன், இசையமைப்பாளர் என்.ஆர். ரஹ்நந்தன், வீர சந்;தானத்தின் சக நடிக நடிகையரான ஹேமலதா, சிறுவன் மாஸ்டர் ராகுல், பேபி வசந்தி, கவிஞர் அய்யப்ப மாதவன், தர்மினி போன்ற தமிழ்த் திரையுலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்ட அருள் எழிலன், இக்காட்சியைத் துல்லியமான உணர்ச்சியுடன் எடுத்திருப்பதன் மூலம், பூரணி புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்திருக்கும் இக்குறும்படத்தினை இன்னும் கச்சிதமான படைப்பாக உருவாக்கியிருக்க முடியும். அருள் எழிலன் இத்தகைய திறன் கொண்ட படைப்பாளி என்பதனை இத்தகைய திரைப்படக் கருவினைத் தேர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே எமக்குச் சொல்லியிருக்கிறார்.

அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.