மன்னார் ஆயர், பாராளுமன்ற உறுப்பினர் முன் தாய் கண்ணீர்!
ராகம வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் தமது மகனான முத்துராஜா டில்ருக்ஷனை (29) காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவரது தாயார் உருக்கமான மன்றாற்டம் ஒன்றை முன்வைத்திருக்கின்றார்.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்டு மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மோசமான உடல் பாதிப்பிற்கு இலக்கானவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த ராகம வைத்திய சாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் முத்துராஜா டில்ருக்ஷன் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் கானாமல் போன தமது மகன் என மன்னார் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் உரிமை கோரியிருக்கின்றார்.
குறித்த தாய் அவரது கணவர் அந்தோனி முத்துராசா, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சகிதம் நேற்று முன்தினம் (9.07.2012) மன்னாரில் ஆயர் மேதகு. இராயப்பு ஜோசப் ஆண்டகை, வன்னி; மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோரைச் சந்தித்தித்திருக்கின்றார்கள்.
இதன்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது மகனைப் பாதுகாப்பதற்கு உதவுமாறு உருக்கமான கோரிக்கையினை இவர்கள் முன் கண்ணீர் மல்க வைத்திருக்கின்றார்கள்.
முத்துராஜா டில்ரூக்ஷன் 2006 ஆம் ஆண்டு தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றிருந்த நிலையில் அவர் அங்கிருந்து தமது குடும்பத்துடன் அடிக்கடி தொடர்புகொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் நாடு திரும்பி வன்னிப்பிரதேசத்தில் வசித்து வந்த அவரது குடும்பத்துடன் இணைந்திருக்கின்றார்.
2007ம் ஆண்டு மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக மாந்தை மேற்கு பிரதேசத்தின் இலுப்பக்கடவை பகுதியில் இருந்து கடல்மார்க்கமாக குறித்த இளைஞன் பயணித்திருக்கின்றார்.
இவ்வாறு பயணித்தவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அப்போது மன்னார் களிமோட்டை பகுதியில் இயங்கிவந்த தடுப்பு முகாம் ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
வன்னியில் போர் உக்கிரமாக இடம்பெற ஆரம்மபித்ததன் பின்னர் இவரிற்கும் குடும்பத்தாரிற்குமிடையேயான தொடர்பு முழுமையாக துண்டிக்கபட்டிருக்கின்றது.
இதன்பின்னர் இவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இவரது குடும்பத்தார் பல இடங்களிலும் தேடிய போதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழக்க ஏனையோர் பலரும் படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த இளைஞனது பெயர் ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து ராகம வைத்தியசாலையில் சென்று பார்த்த போதே அவர் தமது மகன் என அடையாளம் கான முடிந்ததாக இளைஞனின் தாய் தெரிவித்திருக்கின்றார்.
கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமது மகனைக் காப்பாற்ற உதவுமாறு மன்னார் ஆயர் மேதகு. இராயப்பு ஜோசப் ஆண்டகை, மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; வன்னி; மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்திருக்கின்றார்கள்.
1ஆம் இணைப்பு:- 08-07-2012 - 9:50
செய்தித்திருத்தம்:-டில்ருக்சன் அனுராதபுரத்தில் அல்ல றாகமவில் 2006ல்காணாமல் போகவில்லை–2009ல் கைதானார்:-
அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட முத்துராசா டில்ருக்சன் றாகம வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாயார் ரீசா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இன்று காலை அவரைத் தொடர்பு கொண்ட போது நேற்று எமது இணையத்தில் வெளியான செய்தியில் தகவல் பிளைகள் இருப்பதனை உறுதி செய்து அந்த செய்தியின் உண்மைத் தகவல்களை உங்களுக்கு தருகிறோம்.
47 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயான முத்துராசா ரீசா தனது மகன் டில்ருக்சனை நேற்று றாகம வைத்தியசாலையில் பார்வையிட்டதாக எமக்கு தெரிவித்தார். தனது மகன் டில்ருக்சன் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு போனவர் என்றும் 3 வருடங்களின் பின் தமது ஊரான இலுப்பைக் கடவைக்கு திரும்பியவர் என்றும் தெரிவிக்கும் தாயார் அவர் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட போது அவரை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். அதனால் புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக படகு மூலம் களவாகப் புறப்பட்ட டில்ருக்சனை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இவருடன் 2 வருடங்கள் தொடர்பு இருந்த போதும் பின்னர் அவரது தொடர்பு அற்றுப் போனதாகவும் இப்போ ஊடகங்களில் பெயர் வந்ததனை அடுத்து தான் றாகம வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதாகவும் தாயார் ரீசா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.
மொட்டை அடித்து கோமாநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்ருக்சனுக்கு அருகில் செய்ய முடியாத அளவிற்கு மணம் இருப்பதாக கூறும் தாயார் அவரை வவுனியாவுக்கு மாற்றும்படி கோரியிருக்கிறார்.
தனது மகன் வெளிநாடு சென்று திரும்பி வந்து மீண்டும் சவுதிக்கு போக புறப்பட்ட போது புலிகள் அதற்கு அனுமதிக்காததனால் களவாக படகில் புறப்பட்டு சென்ற போது கடற்படையால் கைதான பின் இப்போ அவர் புலிகளில் முக்கியமானவர் என பாதுகாப்பு தரப்பினர் கூறுவதாக ரீசா தெரிவித்துள்ளார்.
தற்போது 29 வயதை அடைந்துள்ள டில்ருக்சன் கைதாகும் போது 26 வயது நிரம்பியவர் என்றும் அவர் இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்றும் தாயார் ரீசா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பவர் 5 வருடங்களுக்கு முன் காணாமல் போயிருந்தவர் - = குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இது எம்மால் பிரசுரிக்கப்பட்ட முன்னைய செய்தி - டில்ருக்சனின் உறவினர்கள் மூலம் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட தகவல்களில் தவறுகள் நேர்ந்துள்ளது. இந்த செய்தித் தவறிற்காக வருந்துகிறோம்.இதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் தாயார் ரீசாவுடன் தொடர்ப்பை ஏற்படுத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
ஆசிரியர்
அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்தவரென கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் இலுப்பக்கடவையினை சேர்ந்த முத்துராசா தில்ருக்ஸன் (வயது 28) என அவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.இன்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்திருந்த தில்ருக்ஸனின் பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
2006ம் ஆண்டில் வெளிநாடு செல்லுவதற்கென கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்றிருந்தவேளை இவர் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளையினை பெற்றோர் பல இடங்களிலும் தேடி திரிந்த நிலையில் பின்னர் நம்பிக்கையிழந்து தமது மகனை தேடுதலை கைவிட்டிருந்தனர்
இந்நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் ஒருவன் தொடர்பாக தகவல்கள் செய்திகளில் வெளியாகியிருந்தது. இதையடுத்தே இன்றைய தினம் அவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்ட வேளையிலேயே காணாமல் போன தமது பிள்ளையினை கண்டுபிடித்துள்ளனர்
இதுவரை காலமும் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் அருகிலிருந்தும் தமது மகன் தொடர்பாக அறியமுடியாது இருந்த அவலம் பற்றி பெரிதும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.தற்போது வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கையிலேயே தமது மகனை கடவுள் தம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்துள்ள நிமலருபன் கூட தகவல் ஒன்றின் அடிப்படையினல் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.