அரச புலனாய்வுப் பிரிவிரா? என சந்தேகம்!
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நெல்லியடி பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது.

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் வட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட அரசியல் தலைவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது யாரோ இனம்தெரியாத நபர்கள் தங்களை அடையாளம் காணமுடியாதவாறு தலைக்கவசம் அணிந்த வன்னம் இரு மோட்டார் சைக்கில்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியை சுற்றி வந்ததாகவும், வயோதிபர் ஒருவரை மோதிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த புலிக்கொடி ஏந்திய நபர்களின் செயற்பாடுகள் குறித்து கண்டுகொல்லவில்லை எனவும், அவர்களை தடுத்து நிறுத்தவோ, விசாரணைச் செய்யவோ இல்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பொதுமக்களை அமைதியா இருக்கும்படி கோரியதுடன் ஆத்திரமடைந்த மக்களை அமைதிப்படுத்தினார்.
ஜனநாயக ரீதியில் தாம் போராட்டத்தை மேற்கொள்ளும் போது தமக்கு புலி முத்திரைக் குத்துவதற்காக இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நாசகார செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராஜ கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையினை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.