விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் கடந்த தேர்தலில் சுசந்த புஞ்சிநிலமேயை ஆதரித்தவர் – சம்பந்தன்

 

இது குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகளினன் புலனாய்வுச் செய்தியாளர் முன்னர் வெளியிட்ட செய்தி ஆய்வு இணைப்பு

ஆட்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் கடந்த தேர்தலில் சுசந்த புஞ்சிநிலமேயை ஆதரித்தவர் – சம்பந்தன்

 

மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசங்கத்திற்கு ஆதரவு அளித்தவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அவர், அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இரா. சம்பந்தன் எம்.பி. கூறினார்.  

எனினும், இளைஞர்கள் சிலர் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு மேற்படி வேட்பாளர் உதவியிருக்கலாம் எனவும் அதை மனிதக் கடத்தல் என தான் வர்ணிக்க விரும்பவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

'தம்மை கொடுங்கோலாட்சிக்குள்ளாக்கும் ஒரு நாட்டிலிருந்து மக்கள் தப்பிச் செல்கின்றனர். இந்நபர், அரசியல் ரீதியாக எம்மை ஆதரிக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் இவர் கடந்த தேர்தலில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவை ஆதரித்தவர். கைது செய்யப்பட்டிருந்த சுமார் 30 இளைஞர்களை, பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டதன் மூலம் விடுவிக்க இவரால் முடிந்தது' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார்.

சர்வதேசத்திற்கு புலம் பெயர்க்கப்படும் - புலம் பெயரும் தமிழர்களும் துலங்கும் மர்மங்களும் -குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வு செய்தியாளர்:

25-07-2012 - 09-38

'சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும். வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நபர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல  இந்த நபர் அணுசரனைகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுரேஷ்குமார் என்ற இந்த நபர், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபை ஒன்றை பிரதிநித்துவப்படுத்தியவர் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்' 

இதுபற்றி மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக திருகோணமலையின் பக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தனது கவனத்தை திருப்பினார். அதன்மூலம் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. 

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்ட சப்ரகமூவா மாகாணத்தைச் சேர்ந்த  மிக முக்கியமான அமைச்சர் ஒருவரும் அவரது நேரடி உதவியாளர்களும் இணைந்தே அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த அமைச்சர் கடற்படையினரின் உதவியுடன் மிகவும் கட்சிதமாக இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளை செய்து வருகிறார்.

இவ்வாறு திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்யப்படும் குடும்பங்கள் வாக்காளர் இடாப்பில் உள்ளவர்களாகவும் நிலபுலங்களை கொண்டிருப்பவர்களாகவும் தெரிவு செய்யப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார்.

அதனால் தெரிவு செய்யப்படுபவர்களின் நிலபுலங்களையே விற்று அதன் மூலம் பெறப்படும் பணத்தை அவுஸ்ரேலிய படகுப் பயணத்திற்கான செலவாக பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நில புலங்களை வாங்குவதற்கு பணம் படைத்த பெரும்பான்மைச் சமூகத்தினர் சிபாரிசு செய்யப்படுகின்றனர். இதன் மூலம் திட்டமிட்ட வகையில் இனப்பரம்பல் குறைக்கப்படுவதோடு தமிழ் மக்களின் நிலபுலங்களையும் பெரும்பான்மை சமூகம் கையகப்படுத்தும் சூக்குமம் நிறைவேற்றப்படுவதாக திருமலையின் நலன் விரும்பிகள் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த வகையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு ஆட்திரட்டும் பணியில் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அல்லது ஆதரவாக செயற்பட்டவர்கள் சிலர் பயன்படுத்தப்படுவதாக ஒரு மாதத்திற்கு முன்பே குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்திருந்தன. எனினும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு காத்திருந்தோம். இப்போ கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த அல்லது ஆதரவாளர்களாக இருந்த சிலர் தமது பாதுகாப்பு அச்சம் கருதி இந்த அமைச்சருடனும் அமைச்சரின் உதவியாளர்களுடன் நெருங்கிச் செயற்பட்டுள்ளனர்.  அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய இவர்கள் தமது ஆட்கடத்தும் தொழிலுக்கான முகவர்களாக ஆட்களை திரட்டுபவர்களாக முன்னணியில் இந்த இளைஞர்கள் சிலரை பயன்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள இந்த சுரேஸ்குமாரின் சகோதரரும் இவர்களின் செயற்பாடுகளோடு தொடர்புபட்டிருப்பதாக திருமலையில் பலர் தெரிவிப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் கிழக்கில் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேரிதலில் கூட்டமைப்பின் மூலம் ஏற்படும் பாரிய சவாலை எதிர்கொள்ள தயங்கும் அரசாங்கம் இப்போ இவ்வாறான விடயங்கள் மூலம் கூட்டமைப்பிற்கு நெருக்குதல்களை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

உண்மையில் ஆட்கடத்தல் நடவடிக்கையில் சுரேஸ்குமாரோ அவரது சகோதரரோ சம்பந்தப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது நியாயமானதே. 

ஆனால் இளனி குடித்தவன் இருக்க கோம்பை சூப்பியவன் அகப்பட்டது போல் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு இலங்கையின் கடுமையான கடற்படைக் கட்டமைப்பை உடைத்து ஆழ்கடலின் ஊடாக ஆட்களைக் கடத்தும் அமைச்சரையும் அவரின் பின்னணியில் செயற்படும் கடற்படை அதிகாரிகள் சிப்பாய்கள் சிலரையும் சட்டத்தின் முன் நிறுத்துவது அல்லவா உண்மையான நீதி.

திருமலையில் மட்டும் அல்ல மட்டக்களப்பு அம்பாறை, முல்லைத் தீவு கடற்பரப்புகளில் இருந்தும் இவ்வாறு ஆட்கள் கடத்தப்படுகின்றனர். இவற்றின் பின்னணியில் அரசாங்கத்தின் வாரிசுகளாக கிழக்கு மாகாண சபையில் இருப்பவர்கள் சிலரும், அரசாங்கத்தின் இணைப்பாளர்களாக கிழக்கில் தொழிற்படும் சில தமிழ்த் தரப்பினரின் உதவியாளர்களும் பின்னணியில் இருப்பது அரசாங்கத்திற்கும் படையினருக்கும் தெரியாத ஒன்றா?

இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் பறவைகளைக் கூட கண்காணிக்கும் இலங்கைக் கடற்படையின் அதி நவீன பாதுகாப்பு வலைப்பின்னலை உடைத்து சாதாரணமான மீன்பிடிப் படகுகளில் தொகை தொகையாக மக்கள் எவ்வாறு அவுஸ்ரேலியா செல்ல முடியும்?

வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் அரசாங்கத்தின் உயர் மட்ட செல்வாக்கு உள்ளவர்கள் தெரிவு செய்திருக்கும் கடற் பரப்புகள் வடக்கு கிழக்கு என்பதும் ஆட்களைத் திரட்டும் செயற்பாடுகளில் இறக்கி விடப்பட்டு இருப்பவர்கள் முன்னாள் புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள், மற்றும் ஆயுதக் குழு உறுப்பினர்கள் என்பதும்  பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். ஆனால் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் இவற்றை துல்லியமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கை மூலம் இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பும் அதனை வழி நடத்தும் அரசாங்க பாதுகாப்புத் துறையும் சர்வதேசத்திற்கு சொல்ல முனைவது என்ன? விடுதலைப் புலிகளே சர்வதேசரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல்களை திட்டமிட்டு நடத்துகின்றனர். புலிகள் இப்பொழுதும் பலமாகவே சர்வதேச அளவில் தொழிற்படுகின்றனர். இவர்கள் மூலம் சர்வதேச கடற்பாதுகாப்பிற்கும் இலங்கையின் பாதுகாப்பிற்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல். அதனால் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இலங்கை தொடச்ச்சியாக கடுமையான சட்டங்களை கொண்டிருக்க வேண்டும். மற்றையது சர்வதேசம் பயங்கரவாதப் பிரச்சனைகளுக்கு எதிராக எப்படி போராடுகிறதோ அவ்வளவு முக்கியத்துவத்தை இந்த ஆட்கடத்தல் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றுக்கும் கொடுத்துள்ளது. இதனைப் புரிந்து கொண்ட இலங்கை புலனாய்வுக் கட்டமைப்பும் அரசாங்கமும் ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்திக்கொண்டிருக்கின்றன. 

1) உள்நாட்டில் இருந்து ஆட்களைக் கடத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் குடிப்பரம்பலை கட்டுப்படுத்துகிறன.

2) இவர்கள் கைவிட்டுச் செல்லும் நிலபுலங்களை பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு பெற்றுக் கொடுக்கின்றன.

3) புலம் பெயர்ந்து அல்லது புலம்பெயர்க்கப்பட்டு செல்பவர்களிடம் பணத்தை கொடுத்து நிலபுலங்களை கொள்வனவு செய்கின்றன.

4) விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே ஆட்கடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகளை செய்கிறார்கள் என உலகத்திற்கு காட்டுகிறன.

5) புலிகளாயினும் சரி, முன்னாள் புலிகளாயினும் சரி, தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகளாயினும் சரி ஏன் தமிழர்களாயினும் சரி எப்பொழுதுமே சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் என சர்வதேசத்திற்கு காட்டுகிறன.

இவற்றை புரிந்து கொள்ளாத முன்னாள் புலிகள் அவர்களின் ஆதரவாளர்கள் மற்றைய ஆயுதக் குழு உறுப்பினர்கள், தமிழ் முகவர்கள் பலிக் கடாக்களாகிக் கொண்டு இருக்கின்றனர்

அந்த வகையில் அவுஸ்ரேலியாவுக்கும் சர்வதேச அளவிலும் ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அல்லது அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு உதவியாளர்களுக்கு தொடர்பில்லை என்றால் இது குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அரசாங்கம் தயாரா?

 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.