ஹொரவபொத்தானையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இறந்த நிலையில் காணப்பட்ட அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்த 45 வயதான முருகேசு சிவராசா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு இன்று திங்கட்கிழமை அதிகாலை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இறந்தவரின் சடலத்துக்கு அருகில் காணப்பட்ட கோடரி ஒன்றும் காவற்துறையிரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர். இவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தொழில் நிமித்தம் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இவர் பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்ததாகவும் பின்னர் இடையில் அவரைக் காணவில்லை என்றும், நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
அதேவேளை ஹொரவபொத்தானை முக்கரவௌ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காணி தகராறு தொடர்பான வாக்குவாதம் முற்றியதால், இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரை கைதுசெய்வதற்காக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.