செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

யாழ்தேவிக்கு முதல் திரும்ப வேண்டியது தொலைந்து போன மக்களின் வாழ்க்கை!-

 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்-

யாழ்தேவிக்கு முதல் திரும்ப வேண்டியது தொலைந்து போன மக்களின் வாழ்க்கை!-

 

ஈழத் தமிழ் இனம் தன்னுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளை பெறுவதில் தடைகள் இருப்பதென்பதற்கப்பால் பாதையற்ற நிலையில் தவிக்கிறது. ஊரைக் காணாதவர்களும் வீடுகளைப் பார்க்காதவர்களும் எங்கள் மக்கள். வவுனியாவைத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தை தெரியாதவர்களும் வன்னியைத் தெரியாதவர்களும் என்று துண்டிக்கப்பட்ட போர் வலயங்களில் எங்கள் மக்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள். பல்லாண்டுகளாக மூடப்பட்ட பாதைகளும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட வீதிகளும் எங்களுடைவை. அறுந்த வீதிகளும் தடைப்பட்ட வீதிகளும் எங்கடையவை. போராடும் ஈழத் தமிழினம் பாதைகளுக்காகவும் போராடியிருக்கிறது. எங்களுடைய பயணத்தின் பாதைகள் இன்னும் இறுக மூடப்பட்டிருக்கின்றன.    

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் போருக்குப் பிந்தைய அபிவிருத்தி என்கிற பெயரில் ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் காந்தா இன்னும் ஒரு வருடத்தில் யாழ்தேவி திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தார். யாழ்தேவி திரும்புதல் என்பது எதனை குறிக்கும்? உரிமைக்காகப் போரடிய ஈழத் தமிழினம் ஒரு தீர்வைப் பெற்றுக் கொண்டதைக் குறிக்குமா? அல்லது இலங்கை அரசாங்கம் குறிப்பிடுவதுபோல ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் வசந்தம் திரும்பிவிட்டது என்பதைக் குறிக்குமா? 

வடக்கு கிழக்கில் மக்கள் திரும்பாத கிராமங்கள் பல இருக்கின்றன. அதைப்போலவே திறக்கப்படாது மூடுண்ட வீதிகள் பலவும் இருக்கின்றன. ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை கோரிப் போராடிய பொழுது, இருந்த வீதிகளும் மூடுண்டு போயின. இருந்த கிராமங்களும் பறிக்கப்பட்டன. வாழ்க்கை மூடுண்ட வரலற்றுச் சோகத்தில் வாழும் ஈழத்து மக்களுக்கு வாழ்க்கை திரும்புதல் என்பது உண்மையில் எப்படியிருக்கும்? என்றே கேட்கத் தோன்றுகிறது. இலங்கை இனப்பிரச்சினையினையும் ஈழப்போரையும் வைத்துக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை திரும்புதல் என்பது எப்படியிருக்கும் என்பதை மெய்யான புரிதலுடன் நேர்மையாக அணுகுவது முக்கியமானதாகும். 

இந்தியா ஈழத் தமிழர்களுக்காக அக்கறையோடு இருக்கிறது! இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்!! இந்தியா யாழ் தேவி ரயிலை திருப்பி அனுப்பும்!! என்கிற அறிக்கைகள் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவைப் காப்பாற்றுவதைக் குறித்து முயற்சிக்கிறதே தவிர அது ஈழத் தமிழர்களின் வாழ்வை திரும்பி கொடுத்து விடாது என்பதே முக்கியமானது. 

யாழ் தேவி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும். இதன் நீளம் 411 மீட்டர்கள் ஆகும். இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை இலங்கையின் இடம்பெற்ற போர் காரணமாக வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1990 ஜூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. ஆனாலும், மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.

யாழ் தேவி ரயிலை மீண்டும் வருவதற்கு முன்பாக அது எதனால் எப்பொழுது நின்று போனது என்பதைக் குறித்து ஆராயவேண்டியது அவசியமானது. இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை முற்றி ஆயுதப்போராட்டமாக வெடித்த பொழுது 1990இல் யாழ் தேவி உட்பட வடக்கிற்கு வந்து போன ரயலகளின் பாதைகள் அறுந்து போயின. அந்த பாதை துண்டிப்பும் பயண நிறுத்தஙகளும் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை ஏறபடுத்திய பிளவுகளை மிகத் தெளிவாக காட்டின. வடக்கைப் பொறுத்தவரை ரயில்கள் வந்து போன இடங்களில் எரிந்த பெட்டிகள் சிலது மட்டும் மிஞ்சயிருந்தன. அவை யுத்தகளங்களில் பதுங்கி சண்டையிடும் பெட்டிகளாகவும் அகதிகள் வந்து தஞ்சமடையும் பெட்டிகளகவும் மாறின. ஈழத்தில் ரயிலைப் பார்க்காத ரயிலின் சத்தத்தை அறியாத தலைமுறைப் பிள்ளைகள் பலர் உருவாகினார்கள். அவர்கள் பாடப்புத்தங்களிலும் புகைப்படங்களிலும் சத்தமற்ற ரயிலை கண்டனர். சத்தத்தை வாசித்தறிந்தனர். 

ரயிலைப் பார்க்காத வாழக்கை என்பது துண்டிக்கப்பட்ட பாதைகளில் மூடுண்ட யுத்த வலயங்களின் வாழக்கையைத்தான் குறிக்கின்றது. பல்வேறு பொருட்களும் வளங்களும் நீண்ட காலப் பயணங்களும் என்று எல்லாமே தடைபட்ட சூழலில் வடக்கலும் கிழக்கிலும் உருவாக்கப்படடதைக் குறிக்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் எதற்காக இத்தகைய சூழலில் வாழ்கிறார்கள்? என்றும் எதற்காக இத்தகைய சூழலில் வாழ இலங்கை அரசுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்? என்றும் எதற்காக இப்படியான சூழல் உருவானது? என்பதுமே இங்கு முக்கியமானது.  

யாழ்ப்பாணத்தின் புகையிரத நிலையம் இன்று அழிவின் பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கிறது. ஒரு யுத்த நகரத்தில் ஒரு யுத்த நிலத்தில் பல பத்தாண்டுகளாக ரயிலே வராத ஒரு நிலையத்தின் அழிவின் தோற்றத்தை, மீண்டும் மீண்டும் யுத்தத்திற்கு முகம் கொடுத்த அந்த நிலையத்தின் சுவர்களில் உள்ள காயங்களின் கதைகளை நமக்குப் புலப்படுத்துகிறது. யாழ்ப்பாணப் புகையிர வழிகளில் உள்ள கதைகள்தான் யாழ் தேவி என்கிற ரயில் திரும்புவதன் மெய்யான அர்த்தத்தை அவசியப்படுத்துகிறது. 

தாயகம் கேட்டுப் போராடிய நிலையில் கொடும் யுத்தம் காரணமாக ஈழத்து மக்களின் வாழ்க்கை தெருவுக்கு வந்தது. அகதிகளாக அல்லலுறும் சனங்களாக தெருவுக்கு வந்த மக்களின் நீண்ட துயரத்தை யாழ்ப்பாண புகையிரத வழிகள் புலப்படுத்துகின்றன. புகையிரத வழி நீட்சிக்கும் பிரிபடாத இணைப்புக்கும் உதாரணங்களாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் ஈழ மக்களின் வாழ்வில் அவலத்தின் நீட்சிக்கும் பிரசசினைகளின் சிக்கலுக்கும் புகையிரத வழிகள் உதாரணமாகிவிட்டது.  

யாழ் புகையிரத வீதியில் திருவெல்வேலிப் பகுதியில் சில சனங்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அந்தத் தெருக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் ஒரு முதியவர் எப்பொழுதும் இருப்பார். அங்கு ரயில் வராததினால் உருவாகியிருக்கும் ஆலயத்தின் முன்பாக உள்ள திட்டு ஒன்றில் அவர் குந்தியிருப்பைதயும் படுத்துறங்குவதையும் அடிக்கடி காணமுடியும். சில நேரங்களில் அவர் உறங்கிக் கொய்டிருக்கும் பொழுது சில நாய்களும் ஆடுகளும் மாடுகளும்கூட அவருடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும். 

இந்தத் தெருக்களில் ரயில் செல்வதை அவர் பார்த்திருக்கிறார். உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரயில் செல்வதாக தான் திடுக்கிடுவதாக குறிப்பிட்டார். சில தருணங்களில் ரயில் தனக்கு மேலால் ஏறிச் செல்வது போலவும் அதிரச்சியடைந்து எழுவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நிம்மதியான தூக்கத்தை அவர் தூங்கவில்லை என்பதுடன் அதை இழந்து இருபது வருடங்களாகின்றன என்பதுதான் மிகுந்த துயரம். முப்பது வருடங்களாக வீட்டை நிலத்தை இழந்து தெருவில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதூன் இங்கு சனங்களின் சோமாகமாக இருக்கிறது.  

ஆரம்பத்தில் யாழ் புகையிர நிலையத்தில் பல குடும்பங்கள் தஞ்சமடைந்திருந்தனர். புகையிரத வழிகளில் தஞ்சமடைந்திருந்த பலரும் வலிகாமம் வடக்கு உட்பட உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் நிலம் அபகரிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களே. இந்த மக்கள் புகையிரத வழி நெடுகவும் அதன் கட்டிடங்களிலும் சிறிய சிறிய கூடாரங்களை அமைத்தும் குடியிருந்தனர். இந்த மக்களை அகற்றுவதற்கு தீர்மானித்த பொழுது காவல்துறையினர் மூலம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் சொந்த நிலத்திற்கு எங்களை விட்டால் நாங்கள் ஏன் தெருவில் இருக்கப் போகிறோம்? என்று மக்கள் கேட்டார்கள். சொந்த நிலத்திற்கு மக்களை அனுப்புவது குறித்து ஏதுவும் சொல்லப்படாத நிலையில் அந்த வழியில் இருந்த மக்களை அகற்றுவதில் அரச தரப்பு குறியாயிருந்தது. 

வீதியில் வாழ்தல் என்பது ஒரு போராட்டமாகவும் இருக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலத்திற்கு எங்களை வாழ அனுமதி! எங்கள் நிலத்தை எங்களிடம் தா!! என்கிற கோரிக்கைகள் உள்ளடங்கயிருப்பதை உணர்த்துகின்றன. புகையிரத வீதியில் வாழ்ந்து கொண்டு நிலத்தை கோரும் இந்தப் போராட்டம் பெரும் அவலமாக நீண்டிருந்தது. அத்துடன் உயர்பாதுகாப்பு வலயச் சுவர்கள் வரை முட்டிக் கொண்டிருந்தது. எங்களுக்கு இந்த அடையாளம் தேவைதானா? என்று கோண்டாவில் பகுதியில் புகையிரத அலுவலக கட்டடிங்களில் வசிக்கும் மக்கள் கேட்கின்றனர். 

இன்று புகையிரத வழியில் இருப்பவைகளை 'குப்பத்து மக்கள்' என்று சிலர் அழைக்கிறார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை இழந்து 'குப்பத்துச்சனங்கள்', 'சேரிச்சனங்கள்' என்ற அடையாளத்தை இந்த மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு சோகமானது? திருவெல்வேலிப் பகுதியில் விளையாடும் புகையிரத வழியில் வசிக்கும் குழந்தைகளை 'குப்பத்துப் பிள்ளையள்' என்று பலரும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். அந்தக் குழந்தைகளின் புகையிரத வழியில் கொட்டப்படும் குப்பைகளைத்தான் பொழுது போக்காக பொறுக்குகிறார்கள். அவர்களின் கைகளில் விளையாட பொம்மைகளோ, படிப்பதற்கு புத்தகங்களோ இருக்கவில்லை. 

யுத்தம், இடப்பெயர்வு, நிலமிழப்பு என்பன இப்படித்தான் எங்கள் சந்ததியின் அடையாளத்தையே அழித்து வடுகிறது. எதிர்காலத்தின் பசுமையை கருக்கிவிடுகிறது. இனத்தின் அடையாளத்தை மாற்றி விடுகிறது. புகையிர வழியில் பிறந்து அதற்குள்ளே வளர்ந்த பல பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டடிருப்பதாக புகையிரதவழியல் வசிப்பவர்கள் சொல்லுகிறார்கள். எல்லோருடைய பிள்ளைகளைப் போலவும் எங்களின் பிள்ளைகளும் படிக்க வேண்டும் அவர்களின் எதிர்காலம் வளம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆசை நியாயமான ஆசை என்பதைவிடவும் அவசியமான தேவை என்றே குறிப்பிட வேண்டும். 

இந்த மக்களின் கதைகள் இப்படியிருக்க, இந்தப் பகுதியில் சனங்கள் வாழ்ந்தார்களா? என்று கேட்கும் அளவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என அபகரிக்கப்பட்ட இந்த மக்களின் பிரதேசங்கள் பாழடைந்திருக்கின்றன. அங்கு மக்களின் வீடுகள் உடைந்து சிதிலங்களோடிருக்கின்றன. இராணுவத்தினரின் முட்கம்பி சுருள்களும் மண்மேடுகளும் உயர்பாதுகாப்பு வலயக் கிராமங்களின் அடையாளங்களாகிவிட்டன. சில வீடுகள் இராணுவத்தின் தங்குமிடங்காளாகவும் பாசறைகளாகவும் இருக்கின்றன. மக்கள் வெளியேற்றப்பட்ட இந்த வீடுகளுக்கு இந்தக் கிராமத்திற்கு மக்கள் திரும்பமுடியாமல் உள்ள பொழுது யாழ் தேவி ரயில் எங்கு செல்லப் போகிறது? எதற்காக செல்லப் போகிறது என்கிற கேள்விகள் எழுகின்றன.  

வறுமை பகுப்பாய்வுக்கான நிறுவனத்தின் செயற்பாட்டாளர் பிரியந்தி பெனாண்டோ இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சாதாரண மனிதர்களை கணக்கிலெடுக்காதவை என்று குறிப்பிடுகிறார். பாதுகாப்பிற்காக நிலங்கள் அபகரிக்கப்படும் என்று சொல்லப்பட்டதுபோய் அபிவிருத்திக்காக நிலங்கள் அபகரிக்கப்படும் என்று சொல்லப்படும் சூழல் உருவாகும் அபாயம் காணப்படுகிறது. எது அபிவிருத்தி? தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல்கள் உள்ளன. இவை அரசிலுக்கான அபிவிருத்தியாகும். அநுராதபுரத்தின் புராதன நகரத்தை பாதுகாத்துக் கொண்டு புதிய நகரத்தை கட்டமைத்திருக்கையில் யாழ்ப்பாணத்து புராதன வீதிகளை உடைத்து புதிய நகர வீதிகள் அமைக்கப்படுகின்றன. அதைவிட அபிவிருத்தி என்ற பெயரால் மக்களின் காணி நிலங்களை அபகரிக்கும் அபாயமும் இப்பொழுது உருவாகியுள்ளது. 

தமிழ் மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பட்டடினியாலும் நோயாலும் தண்டிக்கப்பட்டவர்கள். மூடுண்ட இராணுவ வலயங்களில் கொலை செய்யபட்டவர்கள். பல பத்தாண்டுகளாக யாழ்ப்பாணத்தற்கான தரை வழிப்பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த பொழுதே யுத்தம் வெடித்து ஏ-9 பதை மூடப்பட்ட பொழுது மனிதாபிமான ரீதியாக அந்தப் பாதையை திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிய பொழுது அரசாங்கம் அதனை நிராகரித்து பாதையை மூடி வைத்திருந்தது. சந்திரிகா அரசாங்கம் ஏ-9 பாதைக்கான யுத்தமாக பல்வேறு படை நடவடிக்கைகளை திறந்து மக்களை யுத்த அவலத்தில் தள்ளியது. எனவே பாதைகளை மூடுவதற்கும் துண்டிபதற்கும் அபகரிப்பதற்கும இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே பாதைகள் அமைத்தலுக்கும் திறத்தலுக்கும் தமிழ் மக்கள் எதிரானவர்களில்லை. சனங்கள் இல்லாத கிராமங்களுக்கு யாழ்தேவி செல்லுவதில் என்ன அர்த்தம் என்பதே தமிழர்களின் கேள்வியாக உள்ளது. 

தற்பொழுது யுத்தம் நடந்த பகுதியில் உள்ள ஏ-9 பாதை புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பாதைகளின் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் இந்தப் பாதை திறப்புக்கள் பெரும் அரசியலாகவும் தமிழர்கள்மீதான தாக்குதலாகவும் அமையும். வன்னிப் பகுதியில் ஏ-9 பாதையை விட்டு சற்றுத் தூரத்திற்குச் செல்லும் பொழுதே போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? போருக்குப் பிந்தைய அபிவிருத்தி எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வடக்கில் வீசுவது வசந்தமா? அவலமா? என்பதைப் பார்க்க முடியும். ஏனெனில் ஏ-9 பாதையின் சில இடங்கிலும் அதற்கு சற்று இறங்கி உள்ளே செல்லும் பொழுதும் சனங்கள் வாழ முடியாத காலக்கொடுமை மிகுந்த கூடாரங்களை பார்க்க முடியும். குண்டுகளும் குளங்களும் உள்ள செம்மண் வீதிகளைப் பார்க்க முடியும். இடிந்து போன வாழ்க்கையை பார்க்க முடியும். 

தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய பொழுது ஓடிக் கொண்டிருந்து யுத்தம் காரணமாக நின்றுபோன யாழ் தேவி ரயிலை மீண்டும் ஓட வைப்பதன் மூலம் இந்தியா குறிப்பிடுவதுபோல ஈழத் தமிழ்ர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. ஈழத் தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்தில்  அமைதியாகவும் உரிமையோடும் வாழக்கூடிய தீர்வு ஒன்று உருவாக்கப்பட்டாலே ஈழத் தமிழர்களின் மெய்யான வாழ்க்கை திரும்பும்., யாழ் தேவிக்கு முன்பாக மக்களும் மக்களின் வாழ்க்கையும் அதனுடன் தொடர்புடைய பலவிடயங்களும் திரும்ப வேண்டும். அல்லது சனங்களில்லாத கிராமங்களுக்கே யாழ் தேவி ரயில் திரும்பும். 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்-

குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

அனுப்புக Home, Srilankan News, Articles
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
07-08-2012, 10:55
 - Posted by Anonymous
தீபச்செல்வன் வாழ்த்துக்கள்.
வெளியே திறந்து இருக்கும் ஒன்றைப் பற்றி சொல்வதை விட உள்ளே புதைந்து இருக்கும் மறைவுகளை வெளிக் கொணர்வதுதான் படைப்பாளிக்கு அழகு. அதனை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளீர்கள். இல்லையில்லை செதுக்கியிருக்கிறீர்கள்.

எம் கண்களுக்கு தெரியும் வெறும் புகையிரத நிலையமும் புகையிரதமும் உயிர் பெற வேண்டும். அது இப்போதல்ல. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் காலத்தே வேண்டும்.

16-08-2012, 06:11
 - Posted by Nadarajah Kuruparan
இது எனது மின் அஞ்சல் முகவரிக்கு கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது:-

யாழ்தேவிக்கு முதல் திரும்ப வேண்டியது தொலைந்து போன மக்கள் வாழ்க்கை

தீபச்செல்வன் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு துணிச்சலாக ஊடக தர்மத்தைப் பின்பற்றி இக்கட்டுரை வரைந்துள்ளார். இந்த கட்டுரையில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது.
எம்மவர்கள் பொருளையா தொலைத்தார்கள் வாழ்க்கையை அல்லவா தொலைத்தார்கள்.
சுதந்திரம், விடுதலை என்று கேட்டோம் ஆனால் இன்று எம்மக்கள் கரண்டும், றெயினும், றோட்டும் தான் சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். சுதந்திரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். இதற்காகவா நாங்கள் இவ்வளவு விலை கொடுத்தோம்.
தொலைந்துபோன வாழக்கையை நாங்கள் தேடும் போது எமது தேடலையும் தடுத்து உயிர் அச்சுறுத்தலை தானே உண்டாக்குகிறது அரசு.
தொலைந்துபோன எங்கள் வாழக்கைதான் இன்றைய எமது தேவை. மத்தியில் ஆட்சி, மாநிலத்தில் சுயாட்சியா கேட்கிறோம்.
தீபச்செல்வன் அவர்களின் எழுத்துருவாக்கங்கள் தொடர்ந்து வெளிவர நல்வாழ்த்துக்கள்

அன்புடன்,
ச.பாரதி
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.