அண்மையில் மன்னாரில் வாடிவீடு ஒன்று தொடர்பான உரிமைப்பிரச்சனையை சிறுபான்மை இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாகச் சித்தரிக்கப்பட்டு அதில் இறந்து போன விடுதலைப் புலிகளின் அல்லது புலிகளின் சித்தாந்தங்களை ஏற்றுகொண்டவர்களின் ஆதிக்கம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முஸ்லீம்களின் முடியேற்றத்திற்கு புலிகள் தடை என்று கோசமும் எழுப்பப்பட்டது. நீதியான நிர்வாக அணுகுமுறை மூலம் மிக இலகுவாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டிருக்க கூடிய ஒரு முரண்பாட்டுக்கு ஒரு இனவாதச் சாயதைப்பூசிய அரசியற்தற்கொலை தற்கொலை மீண்டும் அரங்கேறியது.
இது குறித்து ரிஸாத் பதியுதீனும் புலிகளின் ஆத்மசாந்தியும் என நான் எழுதியகட்டுரையில் சுட்டிக் காட்ட முற்பட்ட விடயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்கள் என்னைப் பக்கச் சார்பான ஊடகவியலாளர், காகிதப்புலி, புலம்பெயர்ந்த புலி என்றெல்லாம் எழுதினார்கள் . எனது சுய அறிவிற்கெட்டியவரை ஊடகதர்மத்தைக் கடைப்பிடித்தே வருகிறேன். தவறுகள் விடும்போது அதனை ஒத்துக் கொள்வதற்கோ திருத்திக் கொள்வதற்கோ தயங்கியதில்லை எதிர்காலத்திலும் இவ்வாறுதான் இருப்பேன். புலிகளின் அரசியற் தவறுகளை சனநாயக மறுப்பை அவர்கள் அழிந்த பின்னரும் கூட குளோபல் தமிழ் விமர்சித்தே வருகிறது. எமது ஊடகத்தின் அடித்தளம் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளைப் பெறுவதுடன் தம்முள்ளும் பெரும்பான்மை இனத்துடனும் பரஸ்பர அங்கீகாரத்துடனும் மதிப்புடனும் தத்தமது அடையாளங்களை இழக்காமல் வாழக்கூடிய ஒரு நிலையைப் பெறவேண்டும் என்பதுதான். இதற்கு ஊறுவிளைவிற்கும் செயற்பாடுகளை ஒரு ஊடகவியலாளன் என்ற தளத்தில் நின்று தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் போது அவற்றை வெளியிடுவேன். இதனை எமது தளத்தின் உண்மையான வாசகர்களும் என்னை நன்கறிந்த உண்மையான அரசியற் செயற்பாட்டாளர்களும் அறிவார்கள். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் மன்னார்ப் பிரச்சனையையும் நான் அணுகினேன். எனது கட்டுரைக்கு வைத்த விமர்சனங்களுக்கு பதிலாக கீழே நான் பகிரப்போகும் விடையங்கள் அமையும்.
இஸ்லாமிய சகோதரர்களே தமிழர்களாகிய நாங்கள் கடந்த மூன்றுதசாப்தங்களாக எமது சொந்த அதிகாரத்தை விமர்சித்தல் என்பதில் தவறுகளை விட்டு மாயைகளுக்குள் சிக்கி இருந்ததால் பல மோசமான அரசியற்தவறுகளை எமது போராட்டம் விடக்காரணமானோம். அதன்தாக்கத்தை இன்னும் அரை நூற்றாண்டுக்கு அனுபவிக்கப்போகிறோம் தமிழ்த் தேசியத்தின் பிற்போக்கான பக்கங்களை எங்கடை பொடியள் என்று நினைத்து விமர்சிக்காமல் அடக்கி வாசித்தன் பலனை இப்போது அனுபவிக்கிறோம்.
இஸ்லாமிய ஊடக நண்பர்களே, முஸ்லீம் புத்திஜீவிகளே பிரதான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அதற்கு தலைமை தாங்குபவர்களின் தவறுகளைப் பாதிக்கப்படும் இனம் என்ற அடிப்படையில் விமர்சிப்பதில் எல்லைகளை வரையறுத்திருந்தோம். அதன் விளைவுகளை இப்போ அனுபவத்துக் கொண்டு இருக்கிறோம்.
எங்களுடைய அனுபவங்களில் இருந்து ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இன்று எழுச்சி பெற்று வரும் சிறுபான்மை அப்பாவிமுஸ்லீம்களின் உணர்வுகளை சுயநல அரசியல் போக்குடையோர் தமது நலன்களுக்காக பயன்படுத்தி அவர்களை பலிக்கடாக்களாக்க முனைகிறார்கள்.இவற்றை சரியாக இனம் கண்டு முளையிலேயே ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலமாக கிள்ளி எறியத்தவறினால் இன்னும் ஒரு 5 அல்லது 10 வருடங்களில் எங்களுடைய இடத்திற்கு நீங்களும் வந்து விடுவீர்கள் என்பதனைத்தாழ்மையுடன் கூற விரும்புகிறேன்.
சரி விடயத்திற்கு வருவோம் மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினதும்படைத்தரப்பினரதும் நில ஆக்கிரமிப்பு விபரம் இங்கு வெளியிடப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான ஏறத்தள 300 ஏக்கர்காணிகளை அரசாங்க படையினர் தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கின்றனர். இதில் குறிப்பாக முசலிப் பிரதேசத்தில் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 56 ஏக்கர்நிலத்தையும் எஞ்சிய 50 ஏக்கர்ருக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களின் வளமான காணிகளையும் கடற்படையினர் படையினர் தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கின்றனர். இதில் 50 ஏக்கரில் கடற்படையினர் விவசாயம்செய்கின்றனர். ஆவர்களின் குடும்பங்களும் அங்கு குடியேறி இருப்பதாகக்கூறப்படுகிறது.
இது போல் 500 ஏக்கர் காற்றாலை மின்சார உற்பத்திக்கென மன்னார் பிரதேசசெயலர் பிரிவில் வர்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ளது. அதில் - 300ஏக்கருக்கு மேலான தனியார் காணியில் 150 ஏக்கர் வரை முஸ்லீம் மக்களுக்கு சொந்தமானது.
மன்னார் நடுக்குடாப் பகுதியில் 10 ஏக்கர் முஸ்லீம் மக்களின் காணியைகடற்படையினர் வைத்திருக்கிறார்கள்.
இதேபோல் மாந்தைமேற்கு சன்னார் 3500 ஏக்கர் இராணுவபயிற்சிக் கல்லூரிக்கு நிலஅளவைத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்டுள்ளது. இதில் 600 ஏக்கர்வரையில் யப்பான் உறுதி என்று சொல்லப்படுகின்ற ஆட்சி முதிச உறுதிமுஸ்லீம் மக்களுக்கு சொந்தமாக உள்ளதென கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இஸ்லாமிய சகோதரர்களே இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு சொந்தமாக இருக்கிற காணிகளை அபகரித்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளியாக அதன் அதி உச்ச நம்பிக்கைக்கு உரியவராகத் தானே அமைச்சர் ரிஸாத் பதியுதீன் இருக்கிறார் அவர் ஏன் இந்தக் காணிகளை உங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்துமீளப் பெற்றுத் தரமுடியாது எனக் கேளுங்கள்.
முசலிப் பிரதேசத்தில் உங்கள் காணிகள் போக மன்னர் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 56 ஏக்கர் காணியில் மன்னார் கடற்படைத் தலமையகமும், 25வீட்டுத் திட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் இராணுவ முகாமும் இருக்கிறது. மன்னாரில் ‘நாட்டாமை” காட்டுகிறதாகக் கூறப்படுகிற ஆயர் ராயப்பு யோசப்பு அவர்களுக்கு இவற்றை மீளப்பறித்துக்கொள்ள முடியாமல் ஏனிருக்கிறது? மன்னாரில் அரச மற்றும் அதன் சார்பு நாட்டாமையைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே அடிப்படை உண்மை.
முஸ்லீம் மக்களின் குடியேற்றத்திற்கு புலிகளின் மறுபிறப்புக்கள் தான் புலிகளின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் தான் தடையென்றால் உங்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் கடற்படையினர், இராணுவத்தினர்,அவர்களை வழிநடத்தும் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரிசாத்பதியுதீன் எல்லோருமே புலிகளின் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று வருகிறது. புலிகள் தன்னும் உங்களை வெளியேற்றியதற்கு ஒப்புக்காகவாது மன்னிப்புக் கேட்டார்கள் அனால் இவர்கள் உங்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இழைக்கப்படப்போகிற அநீதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்புக்கூடக் கேட்க மாட்டார்கள்.
கோந்தைப்பிட்டியில் இப்போ உங்களை மீளக் குடியேற்றி இருக்கும் காணி தேசியநூதனசாலைக்கு உரியது. மன்னார் கோட்டையுடன் அதன் எல்லையோடு கடற்கரையை அண்மித்து இருக்கும் இந்தக் காணி முறையான நிர்வாகநடைமுறைகளோடு உங்களுக்கு தரப்பட்டதா?
அரசாங்கம் எந்த அறிவித்தலின் கீழ் இதனை உங்கள் குடியிருப்பிற்கு ஒதுக்கி இருக்கிறது? இந்த காணியை உங்களுக்கு வழங்குமாறு பிரதேச செயலருக்கு உத்தரவிட்டது அமைச்சர் ரிசாத் பதியுதீன். அமைச்சரவை அனுமதி வர்த்தமானி அறிவித்தல் போன்ற நிர்வாக ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் உங்களிடம் வழங்கப்பட்டுள்ள இந்தக் காணிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுற்றாடல் வனத்துறை அமைச்சராக வருபவர் தேசிய நூதன சாலைகளுக்கு சொந்தமான காணி இது எழுந்து சென்றுவிடுங்கள் என உங்களை குடி எழுப்பினால் அதற்கு நிவாரணம் தருவதற்கு இந்த அமைச்சர் இருக்கமாட்டார்…
இந்த இடத்தில் உங்களுக்கு இன்னுமொரு விடயத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். புலிகள் இருந்த காலத்தில் புலிகள் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் வழங்கிய காணிகளையோ அல்லது தீர்ப்புக்களையோ அரசாங்கம் நிராகரித்துள்ளது. எந்த விதமான சட்ட அந்தஸ்துடைய ஆதாரங்கள் இல்லாது நீங்கள் இதற்கு முன்பு உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்ற காரணத்தை மட்டும் வைத்து மட்டும் கோந்தைப் பிட்டி வலைப்பாடை உரிமை கோருகிறீர்கள். இதற்கு சட்ட அடிப்படை இல்லை என எவரும் நிராகரிக்க முடியும். அவ்வாறு இருக்க இதனை நிர்வாகம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கமால் இனம்சார்ந்த பிரச்சனையாக மாற்றியதன் பின்னுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன என்று சிந்தித்தீர்களா? சிந்தியுங்கள்
மன்னாரில் இலங்கை வன திணைக்களத்திற்கு உரிய 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காடு அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் ஏற்பாட்டில் புல்டோசர்கள் கொண்டு சட்டவிரோதமாக அழிக்கப்படுகிறது. காணிக் கச்சேரியோ பீஎல்பீ அனுமதியோ இதற்கு வழங்கப்படவில்லை. கேட்டால் ஜனாதிபதியின் உத்தரவு என்கிறார்கள். வனத் திணைக்களத்திடம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட காணி அதிகாரமுடைய அதிகாரிகளும் மௌனம் காக்கின்றனர். இந்த 1000 ஏக்கர் முஸ்லீம் மக்களைக் குடியேற்றுவதற்காகவே என அமைச்சர் தரப்பால் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே அரசாங்க மற்றும் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்ட வளமான நிலங்களை மீளப் பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை விடுத்து கடும் வறட்சிகளை சந்திக்கும் மன்னார் மாவட்ட காட்டு வளத்தில் 1000 ஏக்கரை அழிப்பது என்பது எத்தகைய சூழலியல் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதனை ஆராய வேண்டும்.
31.7. 2012 இல் காணிப் பயன்பாட்டுப் பங்கீட்டு குழு கூட்டம் மாந்தை நகர்ப்பிரிவில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் நடைபெற்று அங்கு எடுக்கப்படும் முடிவுகள் பின்னர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் ஆளுநருக்கு காணிப் பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அனுப்பப்படும.; ஆனால் இதற்கு மாவட்ட மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் மாந்தையில் ஏறக்குறைய 5422 ஏக்கர் காணிக்கும் அரசாங்க தரப்பில் சட்டப்படியான அதிகாரத்தை அரசாங்கம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளது.
இப்படி மன்னார் மாவட்டத்தில் ஆயர் இல்லக் காணிகள் தனியார் காணிகள், அதில் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் என்று அனைவரது காணிகளும் அரசாங்கமும் படையினரும் நாளாந்தம் அபகரித்து கொண்டு செல்லும் போது அதனை தடுத்து நிறுத்த முடியாத அமைச்சரும் அவரின் சகபாடிகளும் பிரச்சனையை திசை திருப்பி அனைத்திற்கும் காரணம் புலிகள் புலிகளின் மறு பிறப்புக்கள், ஆயர், நீதவான் என அரசியல் செய்வது எந்த வகையில் நியாயம் என்றே எம்மால் கேள்வி எழுப்பப்பட்டது. எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.
மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினதும் படைத்தரப்பினரதும் நில ஆக்கிரமிப்பு விபரம்:-
வடமாகாணத்தில் கடல் வளமும், விவசாய வளமும் ஒருங்கே நிறைந்த வளம் மிக்கமாவட்டம் மன்னார் ஆகும். 2002..5 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பையும் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியது ஆகும். பல வளம் மிக்க நிலங்களை அரசாங்கமும், படைத்தரப்பும் தன்னகத்தே நாளாந்தம் அபகரிக்கின்றன. இதனால் மக்களின் பொதுவாழ்வு பாதிப்பதுடன் வாழ்வாதாரமும், வளமும் குன்றிவருகின்றது.
யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதுபுதிதாய் நில அபகரிப்பு தொடர்கின்றது. இவை தனியார், மற்றும் அரசகாணிகளாகும். அவற்றில் இதுவரை எமக்குக் கிடைத்த புள்ளி விபரங்களுக்கமைவாக கீழ்வரும் விபரம் பிரதேசசெயலர் பிரிவு ரீதியாகதரப்படுகிறது.
மன்னார் பிரதேசசெயலளார் பிரிவு:
1. 500 ஏக்கர் காற்றாலை மின்சார உற்பத்திக்கென வர்த்தமானி அறிவித்தல் - 300 ஏக்கர் மேல் தனியார் காணி. தாழ்வுபாடு கடற் கரை தொடக்கம் கட்டுக் காரண் குடியிருப்பு வரை.
2. பறவைகள் சரணாலயம் - 15ஆயிரம் ஏக்கருக்கு மேல் நாகதாழ்வு தொடக்கம் வங்காலை முன்பகுதி மன்னார் நகர் நுளை வாயில் வரை.
3. தள்ளாடி வடக்கே திருக்கேதீஸ்வரம் வரை- 272 ஏக்கர் விமான படைத் தளம் அமைப்பதற்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
4. கோந்தைப் பிட்டி துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 09 ஏக்கருக்கு மேலான காணி - பொலிஸ் / இராணுவம்.
5. தலை மன்னார் வீதி-தொழிநுட்பக் கல்லூரியல் விசேட அதிரடிப் படை 05 ஏக்கர்.
6. சௌத்பார் தனியார் காணி- 5 ஏக்கர் இராணுவமுகாம்.
7. தள்ளாடிகோவிலடி, தள்ளாடிமுகாம், தனியார் காணி - 15 ஏக்கர் மேல்.
8. பள்ளி முனை 25 வீட்டுத் திட்டத்தில் 06 வீட்டில் இராணுவ முகாம்.
9. மன்னார் நுளை வாயிலும், கூட்டுறவு சங்க சமாச கட்டட வளாகத்தில் 20 வருடங்களுக்கு மேல் இராணு வமுகாம்.
மன்னார் பிரதேசத்திற்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:
1. தலை மன்னார் கிராமம் கடற் படையினர் 5 ஏக்கர்
2. குருசுப்பாடு கடற்படையினர் 5 ஏக்கர்
3. கட்டுக்காரன் குடியிருப்பு இராணுவம் 2 ஏக்கர்
4. செல்வபுரம் இராணுவம் 12 அரசாணி
5. நடுக்குடா கடற் படையினர் 10 ஏக்கர்
6. பேசாலை (கறட்றொழி கூட்டுத்தாபனம்) (FR CO-OP இராணுவம் 20 ஏக்கர்
7. பேசாலை வெற்றி மக்கள் குடியிருப்பு கடற் படை யினர் 10 ஏக்கர்
8. பேசாலை 4ம் வட்டாரம் கடற் படையினர் 5 ஏக்கர்
9. பேசாலை பிரதான வீதி பொலிஸ் நிலையம் 2 ஏக்கர்
10. சிறுத்தோப்பு கடற் படையினர் 5 ஏக்கர்
11. கீரிசனிவிலேச் நேவி 8 ஏக்கர்
மாந்தைமேற்கு:
1. சன்னார் 3500 ஏக்கர் இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு நில அளவைத் திணைக் களத்தால் எல்லை இடப்பட்டுள்ளது.
2. பரப்புக்கடந்தான் இராணுவமுகாம் - 3 ஏக்கர்.
3. ஆண்டாங் குளம் இராணுவ முகாம் - கூட்டுறவுச் சங்கத்தின் காணி - 01 ஏக்கர்.
4. சாளம்பன் சந்தி இராணுவமுகாம் - தனியார் காணி, ½ஏக்கர்.
5. கள்ளியடி, 25 ஏக்கர். 542 பாடைத் தலைமையகம், 3 ஏக்கர் தனியார் காணி.
6. கூராய் - 05 ஏக்கர் நீர்ப்பாசனத் திணைக்களக் காணி.
7. படகுதுறை- 3 ஏக்கர் கடற்படைஅரசகாணி.
8. நாயாற்றுவெளி- 2 ஏக்கர் அரசகாணி.
9. மூன்றாம்பிட்டி- 3 ஏக்கர் இராணுவம் - தனியார் காணி.
நானாட்டானுக்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:
1. இராணுவமுகாம் அமைத்தல் - பரிகாரிகண்டல் 5 ஏக்கர்
- (விண்ணப்பம்) அருவியாறு,அச்சங்குளம் 2 ஏக்கர்
- செ. ம. க. அடம்பன் 1 ஏக்கர்
- முருங்கன் 4 ஏக்கர்
- பெரிச்சார்கட்டு 4 ஏக்கர்
- (விண்ணப்பம்) மடுக்கரை 4 ஏக்கர்
- (விண்ணப்பம்) நறுவிலிக்குளம் 4 ஏக்கர்
- அச்சங்குளம் 1 ஏக்கர்
2. கடற்படைமுகாம் - பஸ்ரிபுரி 10 ஏக்கர்
- நறுவிலிக்குளம் 2 ஏக்கர் (10ஏக்)
- அச்சங்குளம் 1 ஏக்கர்
- எருவிட்டான் ½ஏக்கர்
தனியார் காணி - K.S மொறாய்ஸ் ¾ஏக்கர்
3. பொலிஸ் வங்காலை - ஸ்ரனிஸ்லஸ் டலிமா 20
வங்காலை - யூஜின் டலிமா 20P
வங்காலை - தாசன் லெம்பேட் 20P
வங்காலை - றோபட் லெம்பேட் 20P
வங்காலை - டேவிற் பீரிஸ் 20P
முருங்கன்- தபுலிங்கம் (தனியார் காணியும் சேர்க்கப்பட்டு) ¼ ஏக்கர்
இரட்டைக் குளம்- பெணாண்டோ 13ஃ4 ஏக்கர்
மடுபிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்டகாணிகளில் படையினர் ஆக்கிரமிப்புசெய்துள்ள இடங்கள்:
1. பாலம்பிட்டி - இராணுவம் அரசகாணி 14 ஏக்கர்
2. குஞ்சுக்குளம் - இராணுவம் 600 ஏக்கர்
3. இரணை இலுப்பைக்குளம் - இராணுவம் 10 ஏக்கர் மேல்
4. மண்கிண்டி - இராணுவம் 4 ஏக்கர் மேல்
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காணிகளில் படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள்:
1. சிலாவத்துரை - இராணுவம் தனியார் காணி 25 ஏக்கர்
2. அரிப்பு - நேவிமுகாம் 4 ஏக்கர்
3. பொலிஸ்படையினர் 10 ஏக்கர் - நேவிமுகாம்
4. முள்ளிக் குளம் ஆயர் காணி 56 ஏக்கர்
5. பொதுமக்கள் தனியார் காணி- 30 ஏக்கர், வயல் நிலம் 25 ஏக்கர்
இதற்கு பதில் எழுதுபவர்கள் எமது மின்அஞ்சல் முகவரிக்கு தம்மை உறுதிப்படுத்தி சொந்தப் பெயரில் அனுப்பிவைத்தால் அதனை எந்த வித தணிக்கையும் இன்றி வெளியிடத் தயாராக இருக்கிறோம். radiokuru@yahoo.com
குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.