யாழ் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி
கருணா, கே.பி, பிள்ளையான்களுக்கு பொதுமன்னிப்பு அவர்களால் யுத்தத்திற்கு தள்ளப்பட்வர்கள் அடித்து கொலை – யாழ் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றய (15.08.12) ஆர்ப்பாட்டம் இடையூறுகள் இன்றி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் இன்று முற்பகல் 11மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் போராட்டம் நண்பகல் 12 மணியை தாண்டியும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக கருணா, கே.பி, பிள்ளையான் போன் றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என கேள்வியெழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியதோடு பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். விசேடமாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசனும் அரசியல் உரைகளை நிகழ்த்தினர்.