இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பாக சிறந்த வளர்ச்சி வேகத்தை காட்டுவதாகவும் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் அதிகரித்தது. அத்துடன் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளும் பாரிய வீடமைப்புத்திட்டம் இதுவாகும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசியல் ரீதியாகவும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அசோக் கே காந்தா கூறியுள்ளார்.