நாட்டின் சகல பிரஜைகளுக்கும் சமவுரிமை வழங்கப்படக் கூடிய வகையிலான சட்டப் பின்னணி உருவாக்கப்பட வேண்மென முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.ரீ.எம். வராவௌ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் அரசியல் அமைப்பிற்கு தலைமை தாங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அபிலாஷை கொண்டு இயங்குவதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் அரசியல் அபிலாஷையுடன் செயற்பட தமக்கு சகல உரிமைகளும் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவதனை தடுப்பதே தமது அரசியல் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஓர் சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதுவே தமது அரசியல் அபிலாஷை என முன்னாள் நீதவான் வராவௌ குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சம உரிமை வழங்குவதற்காக போராடும் எந்தவொரு அமைப்பிற்கும் தலைமை தாங்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சட்டத்தை மதிக்கின்றார்கள், அரசியல் காரணங்களுக்காக சட்டம் பக்கச்சார்பாக செயற்படாக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கைக்காரர்கள், திருடர்கள், பாதாள உலகக் கோஷ்டியினரே இன்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் சட்டத்தை மதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு 18ம் திருத்தச் சட்ட அமலாக்கம் பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
17ம் திருத்தச் சட்ட மூலம் இல்லாதொழிக்கப்பட்டதனால் முக்கிய துறைகளின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கிடையாது எனவும், அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய கொலைகாரர்கள், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.