கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி ஆகிய அரசியல்வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி, வெளியிட்டு வரும் கருத்துக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல தரப்பினர், இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி விட்டு, வாக்குகளை பெற முயற்சித்து வரும் விதத்தை காணமுடிகிறது. முக்கியமாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆசாத் சாலி போன்ற அரசியல்வாதிகள் முஸ்லிம் அடிப்படைவாதத்தை மாகாணத்திற்கு பரப்பி வருகின்றனர். இவற்றை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். 30 வருட போரின் பின்னர், நாட்டில் இனவாதம் மற்றும் மத வாதம் ஏற்படும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக் கூடாது.
இவை குறித்து அரசாங்கமோ, அதிகாரிகளே தேடி பார்ப்பதில்லை. அரசாங்கம் இதனை விட பொறுப்பான வகையில் இவை குறித்து தேடி பார்க்க வேண்டும் எனவும் விமலஜோதி தேரர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைப்பின் செயலாளர் கலகொடஹத்தே ஞானசார தேரர், கிழக்கு மாகாணத்தில் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதத்தின் நிழல்கள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளன. மாகாண தேர்தலுடன் இது வெளிப்பட ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம், ஆசாத் சாலி ஆகியோர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இதனை பொதுபல சேனா வன்மையாக கண்டிக்கின்றது. அதிகம் துள்ள வேண்டாம் என நாம் ஆசாத் சாலியை கேட்டுக்கொள்கிறோம். அரசியல் செய்வதற்கு முன்னர், அவர் நாட்டின் வரலாற்றை படிக்க வேண்டும். நாட்டின் பௌத்த வரலாற்றை பற்றி கூற அவர் யார்?. ஊராபொ, அனுராதபுரம், தம்புள்ள குறித்து விவாதிக்க வருமாறு ஆசாத் சாலிக்கு சவால் விடுகின்றோம். இலங்கையில் முடியாவிட்டால், மத்திய கிழக்கில் கூட விவாதத்தை நடத்தலாம். கிழக்கு மாகாணத்தில் பௌத்த உரிமைகள் உளள்ன.கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை கண்டுப்பிடித்து, சிங்களவர்களின் தாய் மண்னை எவ்வாறு கண்டுப்பிடித்தோம்?. இவற்றை நாம் பொறுத்து கொண்டிருக்கும் போதுதான் அவர்கள் கூப்பாடு போகின்றனர். பௌத்தர்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என இவர்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த சகல சக்திகளுக்கும் எதிராகவே பொதுபல சேனா என்ற அமைப்பு தேவைப்படுகிறது. அதனை நாம் படிப்படியாக கட்டியெழுப்பி வருகிறோம் என கலகொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.