அரசு கூட்டமைப்பு பேச்சில் மூன்றாந் தரப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்த்துக்கொள்ள முடியாது என அரசாங்கம் வெளியில் கூறிவந்தாலும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
உள்நாட்டுப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு மூன்றாம் தரப்பு அணுசரனை அவசியமற்றது என உள்நாட்டில் சிங்கள தேசிய வாதக் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
எனினும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் தென்னாபிரிக்காவுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அந்நாட்டின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியூடாக அதனைப் பெறுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கிணங்க, தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நாட்டின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சு நடத்தவுள்ளது.
அடுத்த மாதம் முற்பகுதியில் தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது விடயம் தொடர்பில் அந்நாட்டு அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனத் தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா, அரசு கூட்டமைப்பு பேச்சுக்குழுவின் உறுப்பினரும் என்ற அடிப்படையிலும் அவர் தென்னாபிரிக்கா செல்லவுள்ளார் கூறப்படுகிறது.